ஜின் – நிலவளா ஆறுகளை திசைத்திருப்பல் செயற்திட்டம்

இழப்பு எவ்வளவு:

4 பில்லியன் ரூபா

விளக்கம்:

இந்த செயற்திட்டத்திற்கான ஒப்பந்தமானது சீனாவை தளமாகக் கொண்ட CMAC Engineering எனும் நிறுவனத்திற்கு எந்தவித டெண்டர்களும் கோரப்படாமல் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து கொள்முதல் விதிமுறைகளையும் மீறி குறித்த திட்ட ஒப்பந்ததாரர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2015 ஜனவரி மாதம் 8 ஆம் திகதிக்கு முன்னரே இத்திட்டத்துடன் தொடர்புடைய அனைத்து கொடுப்பனவுகளும் அவசரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதால் இந்த பரிவர்த்தனைகளின் வெளிப்படைத்தன்மை கேள்விக்குறியாக காணப்படுகிறது. இத்திட்டத்துடன் தொடர்புடைய பரிவர்த்தனைகள் 2015 ஜனவரி மாதம் 8 ஆம் திகதிக்கு முன்னர் துரித வேகமாக மூன்று தவணைகளில் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதனடிப்படையில், 2014 நவம்பர் மாதம் 24 ஆம் திகதியன்று முதலாவது கொடுப்பனவாக 1,000 மில்லியன் ரூபாவும் 2015 ஜனவரி 01 ஆம் திகதியன்று இரண்டாம் கொடுப்பனவாக 2,009 மில்லியன் ரூபாவும் 2015 ஜனவரி 6 ஆம் திகதியன்று மூன்றாவது கொடுப்பனவாக 1,003 மில்லியன் ரூபாவும் செலுத்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இத்திட்டத்திற்கு 2015 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட ஆரம்ப நிதி ஒதுக்கீடானது வெறும் 40 மில்லியன் ரூபாவாகும்[i]. 2017 ஆம் ஆண்டுக்கு பின்னர் இது தொடர்பிலான தகவல்களுக்கு பாரிய இடைவெளி காணப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் உலக பாரம்பரியமிக்க சிங்கராஜா வனத்தில் 5 ஹெக்டயர் பரப்பளவில் நீர்த்தேக்கம் கட்டுவது தொடர்பாக 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தற்போதைய நீர்ப்பாசன அமைச்சரான சமல் ராஜபக்ச வெளியிட்ட அறிக்கையானது தொடர்ந்து சமூக ஊடகங்களில் ஓர் சர்ச்சை கிளம்பியது[ii].

இதில் இடம்பெற்றுள்ள ஊழல் என்ன?

  • பொது நிதி தவறாக பயன்படுத்தியதாக கூறப்பட்டது
  • பகிரங்கமாக கோரப்படாத டெண்டர்கள்
  • டெண்டர் நடைமுறைகளின் கையாளுதல் தன்மை
  • அரச கொள்முதல் விதிமுறைகளை மீறுவதற்கான அதிகார துஷ்பிரயோகங்கள்
  • வெளிப்படைத்தன்மை இல்லாமை

ஜின் – நிலவளா ஆறுகளை திசைத்திருப்பல் செயற்திட்டத்திற்காக இவ்வளவு பாரிய தொகை செலுத்தப்பட்ட போதிலும் அதற்கான வேலைத்திட்டங்கள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. நீர்ப்பாசன அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இத்திட்டமானது தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் திட்டமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.[iii]

பாதிக்கப்பட்டவர்கள் யார்?

பொதுமக்கள். அரசாங்கம் செயற்படுத்தப்படாத பணிகள் அல்லது வழங்கப்படாத பொருட்கள் அல்லது சேவைகளுக்காக  பாரியளவான பணத்தினை செலுத்தும் போது மக்கள் நன்மை அடையக்கூடிய பிற திட்டங்களுக்கு தேவையான பணம் கிடைக்கப்பெறாமல்  போகின்றது.

இதுவரை நடந்த விடயங்கள் என்ன?

  • 2015-2019 காலப்பகுதிக்குரிய அரசாங்கத்தினால், குறித்த திட்டம் ஆரம்பிக்கப்படும் வரை செலுத்தப்பட்ட முழுத் தொகையினையும் அரசாங்கத்திற்கு மீளச் செலுத்துமாறு நீர்ப்பாசன அமைச்சின் புதிய செயலாளரினால் CAMC Engineering நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த கோரிக்கை குறித்த நிறுவனத்தினால் நிராகரிக்கப்பட்டது.
  • பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் நீர்ப்பாசன அமைச்சின் முன்னாள் செயலாளரானW ஐவன் டீ சில்வாவினை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. ஐவன் டீ சில்வா குறித்த கட்டுமான நிறுவனத்திற்கு கொடுப்பனவுகளை மேற்கொள்ள செல்வாக்கு செலுத்தியதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும், குறித்த செயலாளர் தற்போது நியூசிலாந்தில் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு இந்த வழக்கு தொடர்பிலான மேலதிக தகவல்கள் ஊடகங்களில் கிடைக்கவில்லை.
  • ஒப்பந்தப் பத்திரங்கள், சாத்தியமான அறிக்கைகள், அமைச்சரவை பத்திரங்கள்/குறிப்புகள், முன்னாய்வு அறிக்கைகள், கொள்முதல் தொடர்பிலான குழுவின் முடிவுகள், சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கை மற்றும் இதனுடன் தொடர்புடைய ஏனைய ஆவணங்களைக் கோரி நீர்ப்பாசன அமைச்சிடம் ஓர் தகவல் அறியும் உரிமைக்கான விண்ணப்பத்தினை TISL நிறுவனம் தாக்கல் செய்தது.
  • ஜின் – நிலவளா ஆறுகளை திசைத்திருப்பல் செயற்திட்டத்துடன் திருக்குமார் நடேசனுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்து JVP கட்சியும் தனது கவனத்தினை வெளிப்படுத்தியது. CMAC Engineering நிறுவனம் மற்றும் ஹாங் கொங் நாட்டில் திருக்குமார் நடேசனின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனமான Red Ruth Investment Ltd ஆகிய நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளினுடாக மில்லியன் கணக்கிலான நிதிப் பரிமாற்றம் நடந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது (திருக்குமார் நடேசன் என்பவர் முன்னாள் பிரதி அமைச்சரான நிருபமா ராஜபக்சவின் கணவராவார்)[iv].

என்ன செய்ய முடியும்?

  • இந்த ஒப்பந்தத்தின் மூலம் அரச அதிகாரிகள் அல்லது மக்கள் பிரதிநிதிகள் உருவாக்கிய பொது நிதி இழப்பு குறித்து விசாரணைகளுக்கு அழைப்பு விடுக்க வேண்டுதல்.
  • குறித்த ஒப்பந்தத்தினை மீறியமைக்காக, திட்டத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தல்.
  • திருக்குமார் நடேசன் தொடர்பாக சமீபத்தில் பண்டோரா பேப்பர்ஸ் ஊடாக பகிரங்கப்படுத்தப்பட்ட ஊழல் மற்றும் இலஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் கோரிக்கை முன்வைத்தல்.
  • COPA மற்றும் COPF போன்ற பாராளுமன்ற மேற்பார்வைக் குழுக்களூடாக பொது நிதியை பாரியளவில் முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வேண்டுதல்.

[i] https://www.youtube.com/watch?v=-OozYoNolww&ab_channel=NewsfirstSriLanka

[ii] http://www.colombopage.com/archive_21A/Mar23_1616475306CH.php

[iii] http://www.irrigationmin.gov.lk/ongoing-projects/index.html

[iv] https://island.lk/jvp-calls-for-multi-agency-probe-into-rs-4-bn-gin-nilwala-scam/